சொத்து இழந்து சுகமதை இழந்தும்
சோதனை கண்டு சோகம் கண்டும்
சிறை சென்று செக்கு இழுத்தும்
கல் உடைத்து பிரம்படி கண்டும்
குருதி சிந்தி தேகம் மெலிந்து
வலி தாங்கி இன்னுயிர் விட்டும்
தந்தை தாய் தனயனைப் பிரிந்து
பட்டம் புகழ் பதவியும் துறந்து
தன்னலம் இன்றி பாடு பட்டு
பொது நலம் ஒன்றே கண்டு
உணர்ச்சி பொங்க கண்ணீர் மல்க
தியாகச் செம்மல் பல கண்டு தந்த
உயிரினும் மேலாய் ஓங்கி இருக்கும்
பாரத அன்னையைப் போற்றி நின்று
பேச்சுக்கும் மூச்சுக்கும் பாட்டுக்கும்
எழுத்துக்கும் போராடி கிடைத்த
இனிய சுதந்திரம் போற்றி நிற்போம்
இந்திய பாரதத்தை காத்து நிற்போம்
கிடைத்த சுதந்திரம் போற்றி நின்று
பேணிக் காத்திட உறுதி அளிப்போம்
ஊழல் இலாத பாரதம் காண்போம்
உரிமை மீறாத சுதந்திரம் மகிழ்வோம்
சிறுமியர் மகளிர் மானம் காப்போம்
சீர் குலையாத வாழ்வு காண்போம்
சுதந்திரம் கிடைத்திட போராடித் தந்த
தியாகியரை நினைந்து போற்றுவோம்
வாழ்க வாழ்க வாழ்க பாரத அன்னை
வளர்க ஓங்குக வான்வரை அவள் புகழ் !
சந்தர் சோமயாஜிலு (@)
சிவ ராம தாஸன்
No comments:
Post a Comment