Friday, May 15, 2020

பெண்கள் தினம் 1


என்னை ஈந்து

உயிரைத் தாங்கிய

அன்பு அன்னைக்கும்

 

என்னை மணந்து

உயிர்மெய் கலந்த

இனிய தாரத்திற்கும்

 

என்னிலே தோன்றி

உயிரை வைத்த 

அன்பு தலை மகளுக்கும்

 

என்னுடனே தோன்றி

உயிராய் இருக்கும்

தமக்கை தங்கையற்கும்

 

என்னுடன் பயின்று

உயிராய் பழகிய

அருமை தோழியர்க்கும்

 

எந்தன் மனைவியின்

உயிரைத் தாங்கிய

அத்தையர் அவர்கட்கும்

 

என்னை ஈந்தவர்

ஈந்தவராம் உயிர்

பாட்டியர் இருவர்க்கும்

 

எனக்கு போதித்து

உயர் கல்வி தந்த

ஆசிரியைகளுக்கும்

 

என்னைப் படைத்து

உயிரை தந்த

அன்னை பராசக்திக்கும்

 

என்னைப் பொறுத்து

உயிரைக் காக்கும்

பூமித் தாயுக்கும்

 

எனக்கருளி கலை

மூன்று தந்த

முப்பெருந்தேவியருக்கும்

 

என்னை புனைய

வைக்கும் உயிர்

மெய்யெழுத்து தமிழ்த்

தாயுக்கும் வந்தனம்.

 

பெண்ணைப் போற்றிடவே

ஈசனும் மலைமகளுக்கு

இடப் பாகம் ஈந்து நின்றான் !

 

பெண்ணைப் போற்றிடவே

மாலனும் அலைமகளை

மார்பில் தாங்கி நின்றான் !

 

பெண்ணைப் போற்றிடவே

அயனும் கலைமகளை

சிரசில் தாங்கி நின்றான் !

 

தாயாய் தாரமாய்

தலை மகளாய்

தமக்கை தங்கை


தோழியாய் அத்தை

பாட்டியார் பேத்தியாய்

ஆசிரியை தேவியர்


பல ரூபமாய் இருந்திடும்

பெண்ணின பெண்மையைப்

போற்றுவோம் ! பெண்ணின

குலத்தைக் காப்போம் !

 

பெண்மையின் பாதுகாப்புக்கு

உதவிடுவோம் ! பெண்கள்

தினத்தை வாழ்த்திடுவோம் !


சந்தர் சோமயாஜிலு (@)

சிவ ராம  தாஸன்



No comments: