ஆடி மாதம்
தமிழ் திங்கள்
அழகிய ஒரு
தமிழ் மாதமே
அற்புதங்கள்
நிறைந்ததொரு
ஆன்மீகத்துகந்த
தமிழ் மாதமே !
வடக்கில் இருந்து
தென்திசை நோக்கி
ஆதவன் அடி
வைப்பது இம்மாதமே
ஆதிமூலமே என
கூவிய ஆனைக்கு
கஜேந்திர மோட்சம்
அருளிய மாதமே.
ஆடிப் பூரத்தில்
அவனியில் தோன்றி
தீந்தமிழ் மொழியில்
திருப்பாவை தந்து
மாந்தர் நம்மை
உய்க்க வந்த
பாவை ஆண்டாள்
அவதரித்தது இம்மாதமே!
ஊசி முனையில்
ஈசனை நினைந்து
உமையவள் வேண்டி
தவம் புரிந்திட
சங்கர நாராயணனாய்
தோன்றி அருளிய
ஆடித்தபசு நிகழ்வு
இத்தமிழ் மாதமே
பௌர்ணமி திதியில்
தோன்றி நின்று
பூரண கல்வி ஞானம்
தந்தருளும் ஸ்ரீ லக்ஷ்மி ஹயக்ரீவர் அவதரித்த
அழகிய மாதம்
இத்தமிழ் மாதமே !
வாழ்க வளமுடன்
மாந்தர் புவியிலே
வையம் தனிலே
அவதரித்து நின்று
வேதத்தை நான்காய் பிரித்தருளிய வேத
வியாசர் தோன்றிய
திவ்ய மிகு மாதமே.
பதினெட்டாம்
நாளாம் திரு நாளில்
பஞ்சம் தீர்த்திட
புண்ணியம் தந்திட
பொதிகை காவிரி
பெருக்கி ஓடிடும்
பதினெட்டாம்
பெருக்கு இம்மாதமே !
வேத ஸ்வரூபமாய்
திகழ்ந்து நிற்கும்
விஷ்ணு வாகனனாய்
பறந்து நிற்கும்
பெரிய திருவடி
சுவாதியில் தோன்றிய
கருட பஞ்சமி
இத்தமிழ் மாதத்திலே !
நீத்தார் கடன் யாவும்
தீர்த்து நின்றிட
முன்னோர் பூரண
அருள் பெற்றிட
தீர்த்த புண்ணிய
நதியில் முழுங்கிட
ஆடி அமாவாசை
புண்ணிய திதியே !
போற்றட்டும் இறைநாமம் பாடட்டும் அவன் புகழ்
பரவட்டும் பக்தி மயம் பொழியட்டும் திருவருள்
பொங்கட்டும் மங்களம் பெருகட்டும் செல்வம்
பைந்தமிழ் மாதம் ஆடித் திங்களிலே !
சந்தர் சோமயாஜிலு (@)
சிவ ராம தாஸன்
No comments:
Post a Comment