உந்தன் வாழ்க்கைத்
துணை யாரடா யாரடா ?
சற்றே நீ எண்ணிப் பாரடா ? (உ)
பெற்றெடுத்த அன்னையுமல்ல
வளர்த்திட்ட எந்தையுமல்ல
மணந்திட்ட மனைவியுமல்ல
தாலி கட்டிய கணவனுமல்ல
பேர் சொல்லும் பிள்ளையுமல்ல
குலமகளாம் மகளுமல்ல
உற்றார் உறவினர் யாருமல்ல
உயிர் கொடுப்பான் நண்பனுமல்ல (உ)
உன்னுடன் நாளும் இருக்கும்
உந்தன் உடலே நீ அறிவாயடா
உந்தன் உயிரைத் தாங்கிடும்
உந்தன் உடலே உடலே உடலே
உதித்தது முதல் இறக்கும் வரை
இறுதி வரை உன்னுடன் இருக்கும்
உயிரை விட்ட பின் உன்னிடம்
விலகும் உடலே உடலே உடலே (உ)
உன்னைத் தாங்கும் உந்தன்
உடலே உந்தன் முகவரியே
உந்தன் பெயரை ஏந்தி
நிற்கும் உன்னத ஆருடலே
உன்னத முறையில் உந்தன்
உடலை நீ பேணி நின்றிட
உன்னுடலும் உன் நலத்திற்கு
ஒத்துழைப்பு தந்திடுமே (உ)
உந்தன் உடலை வளமாய்
வைப்பதும் பாரமாய் மாற்றுவதும்
உந்தன் கரத்தில் அன்றோ
உந்தன் பொறுப்புமன்றோ
உறவினர்காள் வந்து போம்
காசு பணமும் வந்து போகும்
உன்னைத் தவிர உந்தன் உடலுக்கு
உதவுவார் எவருமிலர் (உ)
ஆரோக்கியம் வளர்ப்பாய் ஆருடல்
காப்பாய் உந்தனுடலுக்கு நீயே
உற்ற துணை ! தியானம் யோகா
பிராணாயாமம் நடைப்பயிற்சியென
நாளும் பயில்வாய் நல்லன நல்கும்
நல்லன உண்பாய் நினைவாய் செய்வாய்
ஸ்ரீ ரவி சங்கர் மொழிந்தார் சிவ ராம
தாஸன் புனைந்தான் கவியிங்கே (உ)
சந்தர் சோமயாஜிலு (@)
சிவ ராம தாஸன்
No comments:
Post a Comment