சுடரொளி வீசி சுற்றி
சுழலும் சூரியனே
சுட்டெரிக்கும் வெயில்
ஏனோ ஏனோ
கடும் சினம்
கொண்டது போல நீ
கடும் கனல் வெயில்
தந்தது ஏனோ
தகிக்கும் தழல் தந்து
தாண்டவமாடி நின்று
தாங்காத தாகத்தினை
தயங்காது தந்தாயே
வற்றாத ஜீவ நதியும்
வற்றி தான் போனதே
வற்றாத நதி இனி எம்
விழி சிந்தும் நீர் தான்
நீர் நதி ஓடம் யாவும்
பாலை வனம் ஆனதே
நில வளமும் குன்றி தான்
விவசாயம் போனதே
நீர் இன்றி வாடிடும்
வையத்து உயிரினத்தை
நீர் இன்று இன்னும்
வாட்டுவது தகுமோ
நிழல் தந்திட மரம்
நடாத எம் குற்றமோ
நிழல் புகா காடு தனை
அழித்த குற்றமோ
சுற்றுப் புற சூழலை
கெடுத்த குற்றமோ
சுகாதார கேட்டினை
விளைத்த குற்றமோ
எரி பொருள் எரித்து
புவி வெப்ப மயமானதாலோ
பருவ நிலை மாறிட
பக்க துணையாயிருந்ததாலோ
மிகுந்த கரிமில வாயு
வெளியேற்றத்தாலோ
வளி மண்டலம் தனிலே
ஓட்டை விழுந்ததாலோ
ஆயினும் ஆதவனே
பிழையாவும் பொறுப்பாய்
ஆதரவு கரம் தந்து
ஆறுதலாய் இருப்பாய்
சிவ ராம தாஸன் சிரம்
பணிந்து விழைகிறேன்
சினம் தணிந்து சுடர்
தணிந்து சுழல்வாயே
சந்தர் சோமயாஜிலு (@)
சிவ ராம தாஸன்
No comments:
Post a Comment