காதல் என்றால்
என்ன அன்பே ?
கன்னித் தமிழில்
மொழிவாய் கண்ணே !
அன்பை மெய்யாய்
பகிர்வது அன்பே
இருவரின் இதயத்தை
இணைப்பது அன்பே
காதலை இசைந்தவள்
காதலியாவாள்
காதலை மொழிந்தவன்
காதலனாவான் (கா)
மன்மதன் துணையுடன்
மலரம்பு எய்திட
மடந்தை மனதினில் நறு
மணத்துடன் தைய்க்கும்
விழிகள் நான்கும்
மௌன மொழி பேசும்
வாரமும் நாட்களும்
தெரியாது பேசும் (கா)
பொய்மையில் புலமை
பூத்துக் குலுங்கும்
கம்பனும் கவிஞரும்
துணை வந்து நிற்பர்
கார்மேக மழையாய்
கவிதை பொழியும்
பொய்யென அறிந்தும்
மகிழ்ந்து நனைவாள் (கா)
ஊடலில் பிரிதலில்
வாடிடும் இதயம்
சேர்தலில் உள்ளம்
கூடிடும் இன்பம்
ஊடலும் சேர்தலும்
காதலின் இலக்கணம்
ராதையும் சகுந்தலையும்
இதில் விலக்கல்ல (கா)
காதலின் பரிணாமம்
இரு மனம் மலர்ந்து
இல்லறத்தில் இணைந்து
பெயர் தனில் மாறலாம்
காதலி துணைவியாய்
காதலன் துணைவனாய்
காதல் மட்டும் மாறாது
கடைசி வரை தொடரும் (கா)
சந்தர் சோமயாஜிலு (@)
சிவ ராம தாஸன்
No comments:
Post a Comment