அதிகாலை சுபவேளை
ஆதவன் தான் வரும் வேளை
காரிருளை விலக்கி நின்று
கதிரொளியை வீசி நிற்கும் (அ)
குயிலினம் தான் பாடி நிற்கும்
சேவலினம் தான் கூவி நிற்கும்
விடியலைத் தான் காட்டி நிற்கும்
துயிலைத் தான் களைந்து விடும் (அ)
சுப்ர பாதம் மெட்டொலிக்க
வாசலில் தான் நீர் தெளிக்க
வண்ண மிகு கோலமிட்டு
விளக்கேற்றி ஒளி வீசும் (அ)
இதழ் விரித்து மலர்ந்து நின்று
தாமரைப் பூ மகிழ்ந்து நிற்கும்
பனிப் போர்வை விலகி நின்று
சுகந்த காற்று அலை மோதும் (அ)
சாலை யோரம் நடை நடந்து
மாலை மதியை வழி அனுப்பி
பாலைக் காய்ச்சி காப்பி அருந்தி
காலைச் செய்தி காணும் நேரம் (அ)
கலை யாவும் கற்கும் நேரம்
கல்வி ஞானம் ஏறும் நேரம்
கலை அருளைப் பொழிந்திட
கலை மகளும் விழைந்திடும் (அ)
திரு விளக்கில் குடி இருக்க
திரு மகளும் விழைந்திடுவாள்
திரு மாலின் துணையுடனே
திரு வருளைப் பொழிந்திடும் (அ)
நேற்று என்பது உதிர் காலம்
நாளை என்பது புதிர் காலம்
இன்று என்பது கதிர் காலம்
இனியன எதிர் கொள்வோம் (அ)
சித்தம் தனில் இறை நினைந்து
தத்தமது பணி புரிந்து
நித்தம் ஒரு நாள் முடித்து
புத்தம் புது புதிய தொரு (அ)
சந்தர் சோமயாஜிலு (@)
சிவ ராம தாஸன்
No comments:
Post a Comment