தன்னை உருக்கி
திண்ணிருள் நீக்கி
தீப ஒளி தந்திடும்
மெழுகினைப் போல
தன்னை ஈந்து
தன் குலம் ஈந்து
தீஞ்சுவை சுவை தரும்
தென்னைப் போல
தன் தலை ஈந்து
தன்னை மாய்த்து
தீச்சுடர் ஒளி தரும்
தீக்குச்சி போல
இலையுடன் நாருடன்
பூவுடன் காயுடன்
சுவை மிகு பழமதை
தரும் வாழை போல
தன் குருதியை ஈந்து
பால் மோர் தயிருடன்
வெண்ணெய் நெய் தரும்
பசுவினைப் போல
தன் தோலினைச் சீவி
கூர் முனையாக்கினும்
எழுதிட உதவி தேய்ந்து
போகும் கரிக்கோல் போல
தன்னலம் பாராது
கருவினைத் தாங்கி
உயிர் அன்பு பாசம்
தரும் தாயைப் போல
தன்னலம் துறந்து
தன் சுகம் மறந்து
தன் பொருள் ஈந்து
தன் உடல் தந்து
பதவி பட்டம் சொத்து
மனை மக்கள்
யாவும் துறந்து
வீர முழக்கமிட்டு
பிரம்படி சவுக்கடி
குண்டடி பட்டு கடும்
சிறை சென்று செக்கு
இழுத்து குருதி ஈந்து
இன்னது என சொல்லா
அல்லற் பல பட்டு
இனிய சுதந்திர சுவாசக்
காற்றினை தந்திட
இன்னல்கள் பற் பல
இன்முகமுடன் ஏற்ற
இந்திய பாரதத் தாயின்
வீர தீர மைந்தர்கள்
தன்னலம் அற்று
நம் நலம் கண்ட
தியாகிகள் தினமதை
போற்றி நினைவோம்
சந்தர் சோமயாஜிலு (@)
சிவ ராம தாஸன்
No comments:
Post a Comment